Monday, February 26, 2007

ஹோமியோபதி...


நேர்காணல்:
ஸ்ரீமதி ரவிச்சந்திரன்
பாதுகாப்பானதும் சிக்கனமானதும் ஹோமியோபதியே!
ஜாய்ஸ் திலகம்
பொதுவாக முன்பெல்லாம் நம் எல்லோருக்கும் காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது வியாதி வந்தால் உடனே ஆங்கில (அலோபதி) மருத்துவரிடம்தான் செல்வோம். ஆனால் சமீப காலமாக பல பேர் ஹோமியோபதி மருத்துவரையும் நாடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்குக் காரணம் பக்க விளைவுகள் ஏதுமின்றி அதேசமயம் அதிகப் பணம் செலவழிக்கும் அவசியம் இல்லாமலும் உள்ளது.

டாக்டர் திருமதி ஜாய்ஸ் திலகம் சென்னை மாநகராட்சியில் முதல் ஹோமியோபதி மருத்துவராக 1980-ம் ஆண்டு பணியில் நியமிக்கப்பட்டவர். இவரது தந்தையும், சகோதரரும் ஹோமியோபதி மருத்துவர்களே! ஹோமியோபதி மருத்துவத்தை படிக்கும்போது கல்லூரியிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார். கோவாவில் நடைபெற்ற ஹோமியோபதி விஞ்ஞான கருத்தரங்கில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாவது பரிசைப் பெற்றுள்ளார். இதழ்கள், வானொலி முதலானவற்றில் ஹோமியோபதி மருத்துவம் பற்றி பல கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார். சென்ற ஆண்டு இவர் எழுதிய 'பணி சார்ந்த பிணிகள்' என்னும் நூல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. அவருடன் ஒரு நேர்காணல்.

அலோபதி அளவுக்கு ஹோமியோபதி அவ்வளவாக பிரபலமடையவில்லையே. காரணம் என்ன?

"மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி மருத்துவம்தான் தூய்மையானதும், சிக்கனமானதும் மற்றும் அஹிம்சா வழியை தழுவியதுமாகும். மறைந்த மருத்துவ மாமேதை டாக்டர் ஹானிமன் மனித உயிர்களைக் காப்பாற்ற சிறந்த வழியை வகுத்த ஒரு மருத்துவ நிபுணராவார். அவரது திறமைக்கும் ஆற்றிய அசாத்திய மருத்துவப் பணிக்கும் அவரது மனித இன நலப்பற்றுக்கும் நான் தலைவணங்குகிறேன்"-(ஒரு புத்தகத்திலிருந்து படிக்கிறார்). இந்த வரிகள் யார் சொன்னவை தெரியுமா? நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி! மேலும் ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த ஹானிமன் ஆங்கில மருத்துவ எம்.டி. பட்டப்படிப்பில் ஜெர்மனியில் உள்ள எர்லேஞ்சன் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, பின்னர் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். அவருக்கு 21 மொழிகள் தெரியும். அவர் ஆங்கில மருத்துவம் தெரியாததால் இந்த ஹோமியோபதி மருத்துவத்தைப் பின்பற்றவில்லை. ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனின்றி போகவே அல்லது பக்கவிளைவுகள் அதிகரித்து அதன் காரணமாக சில விரும்பத்தகாத முடிவுகள் ஏற்படவே ஹோமியோபதியை கண்டுபிடித்தார். எளிமையாகச் சொன்னால் தமிழில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனடிப்படையில் அமைந்ததுதான் ஹோமியோபதி. சின்கோனா மரத்து இலைகளைக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டபோது மலேரியாக் காய்ச்சல் வந்தது. பின்னர் அதே சின்கோனா மரத்து இலைகளைத் தகுந்த அளவில் சாப்பிட்டபோது மலேரியா காய்ச்சல் குணமாயிற்று. இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை. அதன்பின்னர் படிப்படியாக பல்வேறு சோதனைகள் செய்து இம் மருத்துவத்தை வளர்த்தார்.

ஆங்கில மருத்துவத்தில் நோயாளிகளை வயதின் அடிப்படையில் மட்டுமே பிரித்து அவர்களுக்கு மருந்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது என்றும் ஹோமியோபதியில் நோயாளிகளின் வயது ஒன்றாக இருந்தாலும் கூட வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன என்பதாகச் சொல்லப்படுகிறதே?

ஆமாம். இதன் காரணம் என்னவெனில் ஒரு மனிதனின் மனோநிலையைப் பொறுத்தும், உடல்ரீதியாக அவனது தாங்கும் சக்தி எவ்வளவு என்பதைப் பொறுத்துமே மருந்துகளும், அளவும் ஹோமியோபதியில் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஒரு மனிதனின் மனநிலை அவன் பார்க்கும் வேலையைப் பொறுத்தே அமைகிறது. உதாரணத்துக்கு சினிமாவில் பணிபுரிபவர்கள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வார்கள். விழித்திருப்பதற்காக காபி டீ ஆகியவற்றை அடிக்கடிக் குடிப்பார்கள். இது இவர்களுக்கு வாயு, ஏப்பம் முதலிய வாயுத் தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. மேலும் தங்களுடைய மனதில் இருக்கும் உண்மை நிலையை அவ்வளவாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதுவே அவர்களுக்கு இயல்பாகி விடுகிறது. நடிக நடிகையர்கள் தங்களுக்கென்று எந்தவித மகிழ்ச்சி, சோகங்கள் இருந்தாலும் அதனை மறைத்து நொடிப்பொழுதில் சிரித்து, அழுது, இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளைப் பொய்யாகக் காட்ட வேண்டியிருக்கிறது. இதனால் மன உளைச்சல், உடல் உளைச்சல் (Stress) அதிக அளவு இரத்தக் கொதிப்பு முதலியன உண்டாகிறது. அடிக்கடி மற்றவர் பயன்படுத்திய உடைகளை உபயோகிப்பதால் ring worm தோல் வியாதி உண்டாகிறது. கூடவே மன எரிச்சலும் உண்டாகிறது. இப்படி ஒருவர் செய்யும் பணியின் அடிப்படையில் அவரது மனோபாவமும் மாறுகிறது. அதேசமயம் ஒருவர் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளான பேருந்து ஓட்டுனர், அலுவலகத்தில் பணிபுரியும் கணக்கர்கள், டைப்பிஸ்டுகள், டைலர்கள், தொழில் அதிபர்கள் இது போன்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலிலும் பலவகைகள் உண்டு. அதேபோல அவர்கள் மலம் கழித்து விட்டு வரும்போது நாற்றமும் வெவ்வேறு வகைப்படுகின்றன. இதைப்பொறுத்தும் கூட அம்மருத்துவத்தில் வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவர்கள் அடிக்கடி காபி, டீ அருந்துவதை விடவேண்டும். காலை வேளைகளில் ஆகாரம் உண்ணாமல் இருக்கக் கூடாது. 'பைல்ஸ் எனப்படும் மூலம் தனி மூலம், பல மூலம், வெளி மூலம் என்று பல வகைகள் உள்ளன.

இதைத்தவிர முதுகெலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் வர வாய்ப்புண்டு. இவர்கள் முதுகுப்புறம் இருக்கையின் சாய்வுப் பகுதியில் இருக்குமாறு அமர வேண்டும். மலச்சிக்கலுக்கு கோக்கா, நக்ஸ்வாம், அலுமினா போன்ற மருந்துகள் இம்மருத்துவத்தில் உள்ளன. இருப்பினும் மருத்துவரை அணுகியபின் உட்கொள்வது நலம், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகை நிருபர், செய்தித் தொகுப்பாளர் போன்றோர் கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறப்பார்கள். இவர்களும் காலை வேளைகளில் சாப்பிடுவதே கிடையாது. தவிர வெகு நேரம் சிறுநீர் கழிக்க இயலாத சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படும். சில நேரங்களில் ஓய்வின்றி ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ஏற்படும் பலவித அசௌகரியங்கள், இவை தவிர்க்க இயலாதவை. காலை வேளைகளில் ஆகாரத்தைத் தவிர்க்கவே கூடாது. சிலநேரங்களில் உணவு சரியாகக் கிடைக்கவில்லையெனில் நல்ல நீரையாவது பருக வேண்டும். பார்ட்டிகளில் சினேகிதர்களுக்கு 'கம்பெனி' கொடுப்பதற்காக மது அருந்த ஆரம்பித்து முடிவில் அதுவே தினசரி பழக்கமாகிவிடும். இப்பழக்கம் முடிவில் ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களில் கொண்டு விட்டு விடும். சரியான இடைவெளிகளில் சாப்பிடாமல் இருந்தால் அது வயிற்றுப் புண் அதாவது அல்சரில் முடிந்து விடும். காவலர்களுக்கும் இதுபோன்ற நோய்கள் தோன்ற அதிகம் வாய்ப்புள்ளது. வாயுத் தொல்லைக்கு கார்போவெஜ், நக்ஸ்வாம், அச்போடிடா முதலிய மருந்துகளும், மலச்சிக்கலுக்கு நேட்மூர், அலுமினா, கிராபைட் முதலான மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. பேச்சாளர்கள், கோவில்களில் பணிபுரியும் மத குருமார்கள் போன்றவர்கள் அதிக நேரம் நிற்க வேண்டியிருப்பதால் கால் முட்டி இணைப்புகளில் வலியும், கால் சதைகளில் வலியும் வர வாய்ப்புள்ளது. தவிர மேடைப்பேச்சாளர்கள் டென்ஷன் என்பதைச் சந்திக்க வேண்டியிருப்பதனால் அவர்களுக்கு ரத்தக் கொதிப்பும் வருகின்றது. தமது டென்ஷனைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு மது அருந்தவும் தொடங்கி விடுகின்றனர். தவிர உரத்த குரலில் பேசுவதாலும், இடைவிடாது பேசிக்கொண்டே இருப்பதனாலும் அவர்களுக்கு தொண்டைவலி வரவும், மேல் சுவாசக் குழல் வேக்காடும் வருகின்றது. இவர்கள் எந்தக் காரணங்களினால் இதுபோன்ற நோய்கள் வருகின்றன என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்தல் நலம். ஒவ்வொரு பணி செய்யும்போதும் இதுபோன்ற ஏதாவது நோய் வருவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக எந்தவித வேலையும் செய்யாமலிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். அதைவிட எந்தக் காரணங்களினால் நோய்கள் வருகின்றன என்று பார்த்து அவற்றைச் செய்யாமல் தவிர்த்தால் நலமாக வாழலாம்.

பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்யமாக வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நெறிமுறைகள் யாவை?

காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள், மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க இது ஒன்றே சிறந்த வழி. கண்களை அதிகம் உபயோகிக்க வேண்டிய வேலையிலிருப்போர் அடிக்கடி வெளியே வந்து இயற்கை வெளிச்சத்தைப் பார்ப்பது நல்லது. அதிகக் கோபம், உணர்ச்சிவசப்படுதல் இவற்றைத் தவிர்த்து, யோகா, தியானம் இவற்றைத் தினமும் செய்வது நல்லது. குளிர் சாதனப்பெட்டியில் வைத்த பொருட்களை அடிக்கடி எடுத்து சூடு செய்து உண்பது நல்லதல்ல. ஒருமுறை எடுத்தால் அதை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதையும் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக செய்வது நல்லதல்ல. உணவைப் பொறுத்தவரை தற்போது பெருகி வரும் சாலையோரக் கடைகளில் தட்டுகளை ஒரே பக்கெட்டில் நீர் வைத்து அதிலேயே கழுவுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் ஹோமியோபதியில் மட்டுமல்ல. நமது முன்னோர்கள் சொல்லி வைத்த முறைகள்தாம்.

மற்ற மருத்துவமுறைகளின்றும் ஹோமியோபதி மருந்துகள் எவ்விதத்தில் வேறுபடுகின்றன?

சாதாரணக் காய்ச்சலை எடுத்துக் கொள்வோம். 104 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் கூட அலோபதி மருந்துகளை உட்கொண்டால் உடல்நிலை சரியாகி விடும். உடல் மிகவும் அயர்ச்சியாகி சரியாவதற்கு சில வாரங்களாகும். ஆனால் குழந்தைகள் காய்ச்சலினால் அவதியுறும்போது ஹோமியோபதி மருந்து உட்கொண்டால் உடனே காய்ச்சல் இறங்காமல் படிப்படியாகத்தான் இறங்கும். ஆனால் உடல்நிலை கொஞ்சமும் சோர்வாகாது. நன்றாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதை அனுபவித்தால்தான் புரியும். மேலும் இங்கிலாந்தில் ஹோமியோபதியின் சிறப்பை நன்கு உணர்ந்து இப்படிப்பை படிக்க வேண்டுமெனில் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. படிப்பு படித்த பின்புதான் படிக்க முடியும் என்று வைத்துள்ளார்கள். சென்ற ஆண்டு இங்கிலாந்து மகாராணி இந்தியா வந்திருந்தபோதும் கூடவே அவரது தனி ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் க்வின் என்பவர் உடன் வந்திருந்தார். வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை வரை போவதை முற்றிலும் தவிர்க்கலாம். இதனை மக்கள் முன்பை விட அதிகமாகப் புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள். முற்றிலுமாக புரிந்துகொள்வதற்கு அதிக காலம் ஆகாது.

சர்க்கரை நோய் (Diabetes) பற்றிய கேள்வி-பதில்கள்

1. சர்க்கரை நோய் என்றால் என்ன?

முதலில் நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்குள் என்ன செய்கிறது என்று பார்ப்போம். நமது இரைப்பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் சர்க்கரையை எடுத்து இரத்தத்தில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி இரத்தத்தில் கலக்கிறது.

க்ளுகோஸ் எனும் சர்க்கரை தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது ரத்தத்தின் மூலம் உடலில் உள்ள செல்களை சென்றடைய வேண்டும். ஆனால் செல்கள் தானாக சர்க்கரையை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.

ஏதாவது ஒரு காரணத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை தேவையான அளவிற்கு செல்களுக்குள் செல்ல முடியாமல் ரத்தத்திலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது சர்க்கரை நோய்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.

2. ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?

பல காரணங்களால் இது நிகழலாம்.
தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.

3. சர்க்கரை நோய் யாருக்கு ஏற்படும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும்
45 வயதுக்கு மேற்பட்டவர்கள்
பரம்பரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள்
எடை அதிகமாக இருப்பவர்கள்
ஆகியவர்களுக்கு சர்க்கரை நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

4. சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது
அடிக்கடி தாகம்
அதிக பசி
மிக வேகமாக எடை குறைதல்
அதிகமாக சோர்வடைவது
கண்பார்வை மங்குதல்
வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்

5. சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?

இரண்டாம் வகை சர்க்கரை நோயால் ஏற்படக் கூடியவை.
பார்வை இழப்பு
மாரடைப்பு
சிறுநீரகக் கோளாறு
பக்கவாதம்
கால்களை இழத்தல்
கோமா மற்றும் இறப்பு

இஞ்சியின் மகத்துவம்...

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

மருத்துவக் குணங்கள்: இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்சப் பழச்சாறு வகைக்கு 30 மில்லியுடன் தேன் 15 மில்லி கலந்து 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வர ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு 15 மில்லியளவு எடுத்துக் கலந்து 15 மில்லியளவாக 3 வேளை குடிக்க இருமல், இரைப்பு தீரும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.

10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை குடித்து வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), நுரையீரல், சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

இஞ்சியைத் தட்டி தண்*ரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜ“ரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்

உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
1- உடலின் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய அகச்சூழலை உருவாக்குவதும்,
2- உடலின் தண்ணீர் தேவையினை ஒழுங்கு படுத்தி உடலை சமநிலையில் பராமரிப்பதும்,
3-எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பா°பர° இவற்றை சரியான அளவில் வைத்திருக்க கூடிய சக்தியான வைட்டமின் னுயை தருவதும்,
4-சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்ற தாதுப் பொருட்களின் அளவை சரிவிகிதத்தில் தருவது

என்பது உட்பட பல்வேறு பணிகளை சிறுநீரகம் சிறப்பாக செய்து வருகிறது.

சிறுநீரகத்திலுள்ள ஜெ°டா கிளாமருளர் ழுடடிஅநசரடயச என்ற முடிச்சு ரெனின் என்ற சுரப்பியைச் சுரந்து இரத்தக் குழாய்களின் அழுத்தத்தை ரெனின் ஆன்ஜியோ டென்சின் மூலம் (சுநnin - ஹபேiடி வநளேiடிn)

இரத்தக் கொதிப்பை சீர் செய்து சமநிலையில் வைக்கின்றது.

சிறுநீரகம் இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்படுகின்றதா? அல்லது சிறுநீரகத்தால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறதா?

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக இரத்தக் குழாய்களில் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் இரத்தக் கொதிப்பு உண்டாகிறது என்பது எவ்வளவு உண்மையோ அது போன்றே அதிக இரத்தக் கொதிப்பினால் சிறுநீரக செயலிழப்பு என்ற பாதிப்பும் உண்மையே!

பாகற்காய் (பாகல்)

தாவரவியல்ற் பெயர்;(Monordica Charantia)
பாகற்காய் ருசியில் கசக்கும் என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம்.

ஈரபதம்-92.4 கிராம்
புரதம்-1.6 கிராம்
கொழுப்பு -0.2 கிராம்
இழைப்பாண்டம்-0.8 கிராம்
தாதுக்கள்-0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம்
கால்சியம்- 20 மி.கி
மக்ளீசியம்- 17 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி
பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி
சோடியம்- 17.8 மி.கி
பொட்டாசியம்- 152 மி.கி
செம்பு- 0.18 மி.கி
சல்ஃபர்- 15 மி.கி
குளோரின்- 8 மி.கி
வைட்டமின் ஏ- 210 ஐ.யூ
தயமின்- 0.07 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி
நியாஸின்- 0.5 மி.கி
வைட்டமின் சி- 88 மி.கி

100கிராமில் 5 கலோரி உள்ளது.

பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும்.
நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது.
நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும்.
ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும்.
குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.
ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி குணப்படும்.

பீட்ரூட்

இதை ஆங்கிளத்தில் (Beta Vulgaris) இதனைசீமைசர்கரை வள்ளிகிழங்கு என்று சொல்வார்கள்.மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் பீட்ரூட்டின் பறப்பிடம்.
தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ்,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது.
இதில் கார்போஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும்.சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு.

ஈரபதம்-87.7 கிராம்
புரதம்-1.7 கிராம்
கொழுப்பு -0.1 கிராம்
தாதுக்கள்-0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள்-8.8 கிராம்
கால்சியம்- 200 மி.கி
மக்ளீசியம்- 9 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி
பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி
சோடியம்- 59.8 மி.கி
பொட்டாசியம்- 43 மி.கி
செம்பு- 0.20 மி.கி
சல்ஃபர்- 14 மி.கி
தயமின்- 0.04 மி.கி
ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி
நியாஸின்- 0.4 மி.கி
வைட்டமின் சி- 88 மி.கி

100கிராமில் 43. கலோரி உள்ளது.

பித்தம் காரணமாக உண்டாகும் உமட்டல், வாந்தி,வயிற்றுபோக்கு,வயிற்றுக்கடுப்பு,மஞ்சட்காமாலை ஆகியவற்றுக்கு இதன் சாறு நல்லது. பீட்ரூட் இரத்தத்தை
விருத்தி செய்யும்.இயற்கைக்குகொவ்வாத கால்சியப்படுவுகளை கரைக்கும்.
பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரியும்.காலையில் உணவுக்கு முன் சாப்பிடலாம்.
சரும அழற்சி,கொப்புளங்கள்,பருக்களுக்கு பீட்ரூட் கிழங்கு,இலைகளை கொதிக்க வைத்த நீரைப் பிரயோகிக்கலாம்.
பீட்டுட் கொதித்த நீர் மூன்று பங்குடன் ஒரு பங்கு வினிகர் கலந்து ஒற்ற சரும எரிச்சல் நீங்கும்.

தீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்...

மாம்பழத்தின் பயன்கள்:மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.
தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜ“ரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.
மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும்.
கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.
மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.
மாங்காயின் பயன்கள்:
இது அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.
மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் குறைபாடால் ஏற்படும் நோய் குணமாகும்.
காயின் தோலைச்žவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள் உறுப்புகள் பலப்படும்.
மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.
மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத்துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும்.

சளியை போக்கும் சுக்கு...


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

சுக்கு மொழிகள் பத்து:

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

ஆஸ்துமா..

ஆஸ்துமா என்றால் என்ன?
இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!

இந்த மாற்றம் சில மணி நேரங்களில்...ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.
மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..--> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.

ஏன் வருகிறது ?

இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டு தூசி
போர்வை, தலையணை " அழுக்கு"
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்...!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)


யாருக்கு வரும் ?

எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.

நோய்க்குறிகள் என்ன ?

வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்


ஆஸ்துமா: நிவாரணம் என்ன ?

பொது அறிவுரை:
1) நல்ல குடும்ப மருத்துவரின் ஆலோசனை
2) அவர் பரிந்துரையில், தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரின் அவதானிப்பு
3) புகையில்லா சூழல்
வாகனப் புகையை குறைக்கத்தான் முடியவில்லை.
வாய் விடும் புகை, ஆஸ்துமா நோயாளிகள் அருகில் போகாமல் தவிருங்கள்.
பொதுவாக, Passive Smoking -ன் கேடுகள், குறிப்பாக குழந்தைகள்
பாதிக்கப்படுவது இன்னும் பரவலாக பலரால் அறியப்படவில்லை.
ஒரு அறை / காருக்குள் குழந்தை இருந்தால்... தயவுசெய்து
புகைக்காதீர்கள்/ புகைக்க அனுமதிக்காதீர்கள்.
4) ஆரோக்கியம் தரும், உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி
5) மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்துகளை சரியாகப்
பயன்படுத்துங்கள் - உடல் நலமாய் இருந்தாலும்.


மருந்துகள்:

Inhalers __> இன்ஹேலர்ஸ் (மூச்சில் உறிஞ்சுபவை)

1) தீர்ப்பவை = Relievers
வந்துவிட்ட மூச்சுத்திணறலை உடனடியாக கட்டுப்படுத்த/ போக்க.
சுருங்கிய காற்றுக் குழாய்களின் தசைகளை தளர்த்தி
விட்டத்தை அதிகரிக்கிறது.
எப்போதும் (காலாவதியாகாத) மருந்து கைவசம் இருக்கட்டும்.
(எதிர்பாராத விருந்தாளி ஆயிற்றே நம் ஆஸ்துமா...!)
கண்டிப்பாய் வரும் என (பழக்கத்தால்) நீங்கள் கண்டுகொண்ட சூழல்களில்
(விளையாட்டு, குளிர்க்காற்று), அவற்றை எதிர்கொள்ளும் சற்று முன்பே
(முன் ஜாமீன்) இவற்றைப் பயன்படுத்தலாம்.
அடிக்கடி, தினமும் இவை தேவைப்பட்டால், வருமுன் காக்கும் அடுத்த கட்ட
மருந்துகள் தேவை என்று அர்த்தம்.

2) காப்பவை = Preventers
காற்றுக்குழாய் அகவணி அழற்சியைக் கட்டுப்படுத்தி, வீக்கம், சளிநீர் கோர்ப்பதை
மட்டுப்படுத்தும்.
தொடர்ந்து , உடல் நலமாக இருப்பினும் பயன்படுத்த வேண்டும்.
மருந்தளவு கூட்ட, குறைக்க மருத்துவர் ஆலோசனை தேவை.

இதற்கு அடுத்த கட்ட சிகிச்சைகள்:
நெபுலைசர் ( சிறுதுகள்களான "தீர்ப்பவை" ரக மருந்துகளை
வேகமாக ஒரு கருவி மூலம் மூச்சுக்குழாய்க்குள் செலுத்துவது)
ஆக்ஸிஜன்
ஸ்டீராய்டு மாத்திரைகள்
போன்றவை உங்களைப் பரிசோதித்த மருத்துவரின் நேரடி
கண்காணிப்பில் நடக்க வேண்டிய சமாச்சாரங்கள்.

ஆயுர்வேத வைத்தியம்

தமிழகம் பண்டுதொட்டு மருத்துவக்கலையில் மேம்பாடு கொண்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச்சான்றுகள் ஆதாரமாகக் கிடைக்கின்றன. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டொன்றில் மருத்துவமனை செயல்பட்டது குறித்தும், மருத்துவக் கலாசாலை இருந்தது பற்றியும், அங்கிருந்த மருந்துகள் பற்றியும் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் கிடைக்கப்பெறும் மருத்துவச் செய்திகளின் விளக்கமே

திருமுக்கூடல் கல்வெட்டு :

காஞ்சிபுரத்தின் அருகில் திருமுக்கூடல் என்ற ஊரிலுள்ள பெருமாள் கோவிலில் வீரராசேந்திரன் (கி.பி. 1067) காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு அக்கோவிலின் செலவுகளைக் கூறுகிறது. இச்செலவுச் செய்திகளில் அக்கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட வேதாகமக் கல்லூரி, ஆதுலர் சாலை (மருத்துவமனை), இவ்விரண்டையும் சார்ந்த விடுதி ஆகிய மூன்றின் குறிப்புகள் வருகின்றன. கல்வெட்டில் மருத்துவமனை 'ஆதுலர்சாலை' எனக் குறிப்பிடப்படுகிறது. இம்மருத்துவமனை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததுடன், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி புகட்டியும், மருந்துகளைத் தயாரித்தும், பாதுகாத்தும் இருந்துள்ளது. மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் பற்றியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் பற்றியும் மருத்துவமனையில் இருந்த மருந்துகள் பற்றியும் குறிப்புக்கள் அக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

மருத்துவமனையில் பணியாற்றியவர்களும் - செலவுகளும்

இம்மருத்துவமனை 15 படுக்கைகளைக் கொண்டிருந்தது. மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பை ஆதுலர் நடத்தி வந்தார். இவருக்கு நிலம் அளித்து, அந்நிலத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 90 கலம் நெல்லும் 8 காசும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு அறுவை சிகிச்சையாளர் இருந்தார். இவருக்கு 30 கலம் நெல் வழங்கப்பட்டது. மருத்துவ உதவிக்காக இரண்டு உதவியாளர்கள் (வீரன்) நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு 60 கல நெல்லும் 2 காசும் வழங்கப்பட்டன. இவர்கள் மருந்துகளையும் தயாரிப்பார்கள். இரு செவிலியர் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு 30 கல நெல்லும் ஒரு காசும் வழங்கப்பட்டன. மருத்துவமனைக்கு ஒரு நாவிதர் நியமிக்கப்பட்டார். இந்நாவிதர் சிறுகட்டிகளை அறுவை செய்வது போன்ற செயல்களைச் செய்தார். இவருக்கு 15 கல நெல்லை அளித்துத் தன் சொந்த தொழிலையும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு நாழி அரிசி வழங்கப்பட்டது. மருத்துவமன€யில் தண்­ர் எடுப்பவனுக்கு 15 கல நெல் தரப்பட்டது. மருத்துவமனையில் இருந்த மருந்துகளைப் பாதுகாக்கும் செலவிற்காக 40 காசுகள் ஒதுக்கப்பட்டன.

மருத்துவமனையில் இருந்த மருந்துகள் :

மருத்துவமனையில் கெடாமல் பாதுகாப்புடன் வைத்திருந்த இருபது மருந்துகளின் பெயர்கள் மட்டும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு :

1. பிராஹமியம் கடும்பூரி, 2. வாஸா ஹரிதகி, 3. கோ மூத்ரஹரிதகி, 4. தஸமூலா ஹரிதகி, 5. பலலாதக ஹரிதகி 6. கண்டிர(ம்) 7. கலாகேரண்டம(ம்) 8. பஞ்சாகத்தைலம் 9. லஸ•நாட்யேரண்ட தைலம் 10. உத்தம கரணாபித்தைலம் 11. ஸ”க்ல ஸகிரித 12. பில்வாதி கிரிதம் 13. மண்டுகர வடிக(ம்) 14. த்ரவத்தி 15. விமல(ம்) 16. ஸ”நேத்ரி 17. தாம்ராதி 18. வஜ்ரகல்ப 19. கல்யாணகலவண(ம்) 20. புராண கிரித(ம்).

பிராஹமியம் கடும்பூரி

1000 கடுக்காய்கள், 3000 நெல்லிக்காய்களுடன் வில்வவேர், பாதிரிவேர், குஞ்சுவேர், சலமவேர், கூலவேர் ஆகிய ஐந்து வேர்களையும் 200 பலம் எடுத்து 2500 பலம் தண்­ர் விட்டு இக்கலவை பத்தில் ஒரு பங்கு ஆகுமளவிற்குக் காய்ச்ச வேண்டும். இக்காய்ச்சலைத் திரவ நிலைக்குக் கொண்டு வந்து விதை நீக்கிய கடுக்காய்களைக் கொஞ்சம் சேர்த்து அக்கலவையுடன் மண்டுக பரணி 4 பலம், பல்லாரை 4 பலம், பப்பாளி 4 பலம் சங்குப்பூ 4 பலம் ஆகியவற்றைக் கலக்கவேண்டும். மேலும் இக்கலவையுடன் 1000 பலம் சர்க்கரையும், 2 அடகம் நல்லெண்ணையும், 3 அடகம் நெய்யும், இளநீரும் சேர்த்து வேக வைக்கவேண்டும். பிறகு 320 பலம் தேன் சேர்த்துச் சுண்ட வைக்க வேண்டும். இம்மருந்தே 'பிராஹமியம் கடும்பூரி' ஆகும். இம்மருந்து புத்தியைக் கூர்மையாக்கவும், நீண்ட ஆயுள் பெறவும், சரீரம் வலுப்பெறவும், காமாலையைப் போக்கவும் பயன்படுத்தப்பட்டது.

வாஸா ஹரிதகி :

வாஸா என்பது ஆடாதொடாப்பாலை, ஹரிகிதகி என்பது கடுக்காய் இரண்டையும் சேர்த்து லேகியமாக்கிக் கொள்வதே 'வாஸா ஹரிதகி' யாகும். இம்மருந்தைச் சுவாசகாசம் எனப்படும் நுரையீரல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

கோ-மூத்ர ஹரிதகி :

கோ-மூத்ர என்பது பசுமாட்டின் கோமயம். ஹரிதகி என்பது கடுக்காய். ஒருலிட்டர் கோமயத்தில் 25 கிராம் கடுக்காயை ஊரவைத்து வெய்யிலில் வைக்கவேண்டும். கோமயம் அனைத்தும் சுண்டிய பிறகு கடுக்காயைத் தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும். மாகோதரம் எனப்படும் வயிற்றுவலி, மூல வியாதி, வயிற்றில் நீர் சுரத்தல், நீர் பிரியாமல் கைகால்களில் நீர் சுரத்தல் போன்ற நோய்களுக்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

தஸமூல ஹரிதகி :

தஸமூலம் என்னும் பத்து வகையான வேர்களுடன் 100 கடுக்காய்களும் வெல்லமும் தேனும் சேர்த்து 'தஸமூல ஹரிதகி' என்ற மருந்து தயாரிக்கப்படும். இம்மருந்தைச் சிறுநீரக நோய்கள், எலும்புருக்கி நோய், நுரையீரல் சார்ந்த நோய், உணவில் நாட்டமின்மை போன்றவைகளுக்குப் பயன்படுத்தலாம்.

பலலாதக ஹரிதகி :

பலலாதக என்பது சேராங் கொட்டையாகும். இக்கொட்டையுடன் கடுக்காயைச் சேர்த்துக் கோமயத்தில் வேகவைத்து 'பலலாதக ஹரிதகி' தயாரிக்கப்படும். இம்மருந்தை அžரணம், மூலவியாதி, வயிற்றெரிச்சல் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.

கண்டிரம் :

மலைச்சுண்டை, தென்பாறை, சிற்றராகம், மிளகு, சுக்கு கண்டங்கத்தரி, பாப்பார மூலி ஆகியவற்றைக் கொண்டு தயார் செய்யப்படும். சிறுநீர்க் சூழல்கள், வயிறு சார்ந்த வியாதிகளுக்கு இம்மருந்து பயன்படுகிறது.

பலாகேரண்டம் :

பலா என்னும் குருந்தோட்டி வேருடன் ஆமணக்கு வேரையும் சேர்த்து நல்லெண்ணையில் காய்ச்சிப் 'பலா கேரண்டம்' தயாரிக்கப்படும். இம்மருந்து வாத நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சாகத் தைலம் :

கடுகெண்ணெய், சாராயம், கோமயம், வினிக்கல், பார்லிச் செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு ஐந்தையும் சேர்த்துப்புடம் செய்து தைலமாகச் செய்யவேண்டும். இத்தைலம் எலும்புருக்கி நோய்க்குப் பயன்படுத்தப்படும்.

லஸ”நாட்யேரண்ட தைலம் :

லஸ”நாட் என்பது வெள்ளைப்பூண்டு. வெள்ளைப் பூண்டுடன் ஆமணக்கு வேரைத் தைலமாகக் காய்ச்சி 'லஸ”நாட் தைலம்' தயாரிக்கப்படும். இடுப்பு வலிக்கும், கால் நரம்புகளுக்கும், நெஞ்சில் அடைக்கும் வாயுவுக்கும் இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

உத்தம கரணாபி தைலம், ஸ”க்ல ஸகிரித(ம்) :

இவையிரண்டும் இன்று வழக்கில் அதிகமாக இல்லை. எனவே குறிப்புகள் பெற இயலவில்லை.

பில்வாதி கிரிதம் :

பில்வாம் என்றால் வில்வம், கிரிதம் என்றால் நெய். வில்வம் சிற்றரகம், சௌய்யம், இஞ்சி, சிரிங்கபேரம் (இரட்டை இஞ்சி), நெய், ஆட்டுப்பால் ஆகியவற்றைச் சேர்த்து பில்வாதிகிரிதம்' தயாரிக்கப்படுகிறது. ருசியின்மை, வயிற்றுப் போக்கு, காலரா, பாம்புக்கடி, தேள்கடி, எலிக்கடி போன்றவற்றிற்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

மண்டுகர வடிகம் :

மண்டுகரம் எனப்படும் இரும்புடன், காட்டுமிளகு, மரமஞ்சள், மாக்கீரக்கல், காட்டுத்திப்பிலி, தேவதாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, கொடுவேர், கடுக்காய், நெல்லிக்காய், தாண்டிக்காய், கோரக்கிழங்கு ஆகியவற்றைக் கோமயத்தில் கலக்கி மாத்திரையாக்கி மோருடன் உண்ண வேண்டும். இம்மருந்தை இரத்த சோகை, தோல்வியாதி, மூலம் போன்ற வியாதிகளுக்குப் பயன்படுத்தலாம்.

த்ரவத்தி என்ற மருந்து வழக்கில் அதிகமாக இல்லாததால் குறிப்பைப் பெற இயலவில்லை.

விமலம் :

சங்குப்பூ, பிரியங்கு, நேபாலி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து விமலம் என்ற மருந்து தயாரிக்கப்படும். கண்நோய்க்கு இம்மருந்து பயன்படுத்தப்படும்.

ஸ”நேத்ரி :

சிற்றராகம், நாவற்பழம், வாயுவிடங்கம் ஆகிய பழங்களுடன் தாமரை, அதிமதுரவேர், பாறையுப்பு, கற்பூரம், சங்குப்பூ, வசம்பு, ஆயமரப்பட்டை போன்றவற்றைச் சேர்த்து ஸ”நேக்ரி தயாரிக்கப்படும். இம்மருந்து கண் நோய்க்குப் பயன்படுத்தப்படும்.

தாம்ராதி, வஜ்ர கல்ப இவ்விரண்டு மருந்துகள் வழக்கில் குறைவாக உள்ளன. குறிப்புகள் பெற இயலவில்லை.

கல்யாணகலவணம் :

லவணம் என்றால் உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, விளையுப்பு, துவர் சலைப்பு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், நாகதந்திவேர், சேர்குறு, கொடுவேலிக்கிழங்கு, ஆமணக்கு எண்ணெய், கோமயம் ஆகியவற்றை மண்சட்டியில் பஸ்பம் செய்தால் 'கல்யாணகலவணம்' கிடைக்கும். இவ்வுப்பைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டும். மலச்சிக்கல், வயிற்றில் நீர் சுரத்தல், கீரிப்பூச்சி, வயிற்றுப்புழு போன்றவற்றிற்கு இம்மருந்தைப் பயன்படுத்தலாம்.

புராண கிரிதம் :

கிரிதம் என்றால் நெய். 100 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டு வரை பழைமையுடைய நெய்யைப் 'புராண கிரிதம்' என்றும் 'அமிர்தம்' என்றும் அழைப்பர். இந்நெய் புத்தி சுவாதினமின்மைக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும், பிரசவத்திற்கும் பயன்படுத்தப்படும்.

இம்மருந்துக் குறிப்புகளை நோக்கும் பொழுது ஹரிதகி எனப்படும் கடுக்காய் நல்ல மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வருகிறது. மருந்துகளைப் பொடியாகவும், லோகியமாகவும், தைலமாகவும், நெய்யாகவும், மாத்திரைகளாகவும் உப்பாகவும் தயாரித்து வைத்தியம் செய்துள்ள செய்தியை அறியமுடிகிறது. இக்கல்வெட்டில் உள்ள 20 மருந்துகளில் பல மருந்துகள் இன்றும் வழக்கில் உள்ளன. நுரையீரல், கல்லீரல், வயிறு, நரம்பு, கண், இரத்தம், மூளை போன்ற உறுப்புக்களின் நோயைப்பற்றியும், அவற்றிற்குரிய மருந்து முறைகள் பற்றியும் அறிந்திருந்தனர் எனலாம்.

தமிழகத்தில் மருந்துவம் மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது. கல்வெட்டில் கூட மருத்துவக் குறிப்புகளைப் பொறித்துள்ளமை அரும் பெரும் சிறப்புச் செய்தியாகும். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையும், மருத்துவக் கலாசாலையும், அதில் நிரந்தரமாகப் பணியாளர்களையும், மருத்துவ வல்லுநர்களையும், பணியாட்களையும் நியமித்துள்ளதையும்; ஆசிரியர், மாணவர், பணியாற்றுவோர் தங்க விடுதி வசதி செய்தமையும் நோக்கும் பொழுது தமிழகத்தில் மருத்துவம் பற்றிய தெளிந்த அறிவு இருந்தமை புலப்படுகிறது

பக்கவாதம் எப்போது வரும்?


நமது உடலமைப்பு பல ஆரோக்கியமான விஷயங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் நாம், நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. இவற்றில் பக்கவாதம் என்னும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.
பக்கவாதம்:

மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு "ஐசெமிக் ஸ்ட்ரோக்'' (Ischemic stroke) என்று பெயர்.

மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்'' என்று பெயர்.

எனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் "ஐசெமிக் ஸ்டோரோக்''-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் "திரம்போடிக்''(Thrombolytic) மற்றும் "எம்போலிக்''(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.

மினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் "ஐசெமிக் ஸ்டோரோக்'' நிலை உண்டாகிவிடும்.

மீதமுள்ள 20 சதவீதத்தினர், "ஹெமராஜிக் ஸ்ட்ரோக்''கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளை பாதிப்பு:

மூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.

பக்கவாதத்தின் அறிகுறிகள்:

உடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு žராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தாழ்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.

முன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!

‘‘நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும் சுரக்கும்.

பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணி நேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தை களுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வி&யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:

காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’’